மரவள்ளி சாகுபடியை அதிகரிக்க கீழ்காணும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்! – வேளாண் பல்கலை தகவல்!
![](https://kjtamil.b-cdn.net/media/10888/whatsapp-image-2021-02-16-at-165623.jpeg)
மரவள்ளி பயிரில் உயர் விளைச்சல் மற்றும் மகசூலை அதிகரிக்க கீழ்காணும் அடிப்படை மேலாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றவேண்டும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக மரவள்ளி சாகுபடி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தொழிற்சாலை பயன்பாடு மற்றும் உணவு பயன்பாடுகளுக்கும், ஏற்றுமதிக்கும் மரவள்ளியின் தேவை அதிகம் இருப்பதால், மரவள்ளிக் கிழங்குக்கு ஓரளவு நிலையான விலை கிடைப்பதற்கும் இது ஒரு காரணமாகும்.
அதிக விவசாயிகள் மரவள்ளி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மரவள்ளி சாகுபடி செய்து வரும் விசாயிகள், உயர் விளைச்சல் பெறுவதற்கு, சிலஅடிப்படை தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப ஆலோசனைகள்:
- மரவள்ளி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்தல், சொட்டுநீரில் கரையும் உரங்களை கலந்து அளிப்பதால் அதிக விளைச்சல் மற்றும் கிழங்கில் அதிக மாவுச்சத்து கிடைக்கிறது.
- விதைக் கரணைகள் தேர்வு செய்யும் போது, நோய் தாக்காத செடிகளில் இருந்து மட்டுமே எடுக்க வேண்டும்.
- மரவள்ளி பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 100 எண்ணிக்கையில் ‘அசிரோபேகஸ் பப்பாயே’ ஒட்டுண்ணியை விட வேண்டும். இந்த முறைகளை கையாண்டால், நடவு செய்ததில் இருந்து, 9 – 11 மாதங்களில் ஹெக்டேருக்கு, 30 – 40 டன் வரை விளைச்சல் பெறலாம்
அதிக விளைச்சல் தரும் ஏக்தாப்பூர் -1 ரகம்
சேலம் மாவட்டம், ஏக்தாபூரில் அமைந்துள்ள அரசு மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட ஏக்தாப்பூர் – 1 என்ற உயர் விளைச்சல் ரகத்தை நடவு செய்தால், ஹெக்டேருக்கு, கூடுதலாக 10 டன் வரை விளைச்சல் பெறலாம். மேலும், மாவுச்சத்தும் அதிகரிக்கும். இந்த ரக விதைக் கரணைகளை, ஏக்தாப்பூர் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி பெறலாம் என்றும் கோவை வேளாண் பல்கலைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
நன்றி:கிருஷி ஜாக்ரன்