பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை உரம் – ஆமணக்கு கரைசல்!
![Castor solution used to destroy pests naturally](https://kjtamil.b-cdn.net/media/7479/kj.jpg)
பயிர்களில் பெருமளவில் ஏற்படும், பூச்சித்தாக்குதலை இயற்கை முறையில் அழிப்பதில் ஆமணக்கு கரைசல் நல்ல பலனை அளிக்கிறது.
பயிர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் வளர்த்தச் செடிகள் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படும்போது அவற்றைப் பாதுகாக்க ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறோம்.
எனினும் இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிருக்கும் உயிரூட்ட முடியும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும்.
அவ்வாறு பூச்சித்தாக்குதலில் இருந்து மண்ணைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் கரைசல்களில் ஒன்றே ஆமணக்கு கரைசல்.
![](https://kjtamil.b-cdn.net/media/7481/dinamalar.jpeg)
தயாரிக்கும் முறை
5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின் கலவையிலிருந்து வாசனை தோன்றும்.
5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும்.
தென்னந்தோப்பு பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து இறந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூச்சிகளை துாக்கி எறிந்துவிட்டு மீண்டும் அதே கரைசலைப் பயன்படுத்தலாம்.
கட்டுப்படும் பூச்சிகள் (Controlling pests)
கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளும், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களின் சாம்பல் நிற வண்டையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். சிறுதானிய பயிர்களில் இக்கரைசலைப் பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும். எலிகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும்.
தகவல்
எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை.
நன்றி:கிருஷி ஜாக்ரன்