படைப்புழுவின் தாக்குதலிலிருந்து பாதுக்காக்க ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள்
நடப்பாண்டில் காரிப் பருவத்தில் தற்போது மக்காச்சோள விதைப்பு நடைபெற்று வருகிறது. விதைப்புப் பணி சூலை மற்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறும். எனவே, நடப்பாண்டில் படைப்புழு தாக்குதலை வெற்றிகரமாக நிர்வகிக்கும் வகையில், அனைத்து மக்காச்சோள விவசாயிகளும் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோடை உழவு செய்தல், கடைசி உழவில் ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல், உயிர் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா அல்லது பரிந்துரைக்கப்படடுள்ள இரசாயன மருந்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல். ஒரேசமயத்தில் அனைத்து விவசாயிகளும் விதைத்தல் இறவை பயிருக்கு 60 செ.மீட்டருக்கு 25 செ.மீட்டர் என்ற இடைவெளியும், மானாவாரி பயிருக்கு 45 செ.மீட்டருக்கு 20 செ.மீட்டர் என்ற இடைவெளியும் பாராமரித்து, 10 வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீட்டர் இடைவெளி விட்டு விதைத்தல். எக்டருக்கு சூரிய விளக்குப்பொறி ஒன்றும், 12 இனக்கவர்ச்சிப் பொறிகளும் வைத்து பூச்சி நடமாட்டத்தை கண்காணித்தல். தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயறை ஊடு பயிராகவும் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். ஆங்காங்கே முட்டைக் குவியல்கள் மற்றும் இளம் புழுக்கள் தெரிந்தால், உடனே அவற்றை சேகரித்து அழித்தல், தொடர்ந்து மக்காச்சோளம் சாகுபடி செய்வதை தவிர்த்தல், மணலுடன் சுண்ணாம்பு தூள் 9:1 என்ற விகிதத்தில் கலந்து குருத்துகளில் இடுதல், டிரைக்கோகிரம்மா எனும் முட்டை ஒட்டுண்ணிகளை வெளியிடுதல், இதையும் மீறி, படைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்பட்டால், வேம்பு சார்ந்த தாவரப் பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் அல்லது 5 சத வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தல். இளம்புழு பருவத்தில் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியும், வளர்ச்சி அடைந்த புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றையும் பயன்படுத்தலாம். இது தொடர்பாக, துறை பரிந்துரைக்காத இரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது. மேலும், தொடர்ந்து ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கக்கூடாது. விவசாயிகளுக்கு தேவையான பவேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்ற உயிரி பூச்சிக்கொல்லிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பயிர்ப்பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நடப்பாண்டில், படைப்புழு தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தி, நல்ல விளைச்சல் பெற்றிட மக்காச்சோள விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேளாண்மை துறை