பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
சாகுபடி செய்யப் படும் பயிர்களில் செப்டம்பர் மாதத்தில் பூச்சி, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான வழிமுறைகளை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நெல்பயிர்: நெல்லில் இலைச் சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு வயல்களில் விளக்கு பொறி (ஏக்கருக்கு ஒன்று) வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் ஒரு ஏக்கருக்கு வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி. 500 மில்லியை நீரில் கலந்து பயிர்களில் தெளிக்கவும். நாற்றங்காலில் (20 சென்டுக்கு) இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 50 மில்லியை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
குலை நோயானது இலையில் கண் வடிவ புள்ளிகளுடன் நடுப்பகுதி அகன்றும் முனைப் பகுதி குறுகியும் காணப்படும். பெரிய புள்ளிகளானது சாம்பல் நிற நடுப்பகுதியுடனும் பழுப்பு நிற ஓரங்களுடனும் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த தழைச்சத்தை மேலுரமாக இடுவதை தாமதிக்கவும் அல்லது குறைத்து இடவும். ஹெக்டேருக்கு கார்பன்டாசிம் 500 கிராம் தெளிக்கவும்.
பருத்தி: பருத்தியில் காய்ப் புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்டாக்சாபார்ப் 14.5 எஸ்.சி 200 மில்லி (ஏக்கருக்கு) அல்லது ட்ரைஅசோபாஸ் 40 இ.சி 800 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
நிலக்கடலை: சிகப்பு கம்பளிப் பூச்சி, இலை துளைப்பானின் நடமாட்டத்தைக் கண்டறிய விளக்குப் பொறியை ஏக்கருக்கு ஒன்று வீதத்தில் வைத்து கண்காணிக்கவும். விளக்கு பொறியில் அந்திப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உடனடியாக் டைகுளோவாஸ் 76 டபிள்யு எஸ்.சி. 500 மில்லி அல்லது குளோர்பைர்பாஸ் 20 இ.சி. 500 மில்லி அல்லது பாசலோன் 35 இ.சி. 300 மில்லியை (ஏக்கருக்கு) தெளிக்க வேண்டும்.
விவசாய, தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் கட்டுப்பாடு சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ, மாவுப் பூச்சியின் சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து நடமாட்டத்தைக் கண்டறியலாம். தேவைப்பட்டால் வேப்பங் கொட்டைச்சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப் 1 கிலோவை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மைய இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.