வேம்பில் தயாராகும் பூச்சிச்கொல்லி
வேப்பிலை, வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் பயன்பாடு, பெருகி வருகிறது.
வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து துறையின் சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை, ஆண்டுக்கு, 7 – 9 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாக, Exim Bankஎக்சிம் பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வேம்பின் விதைகள் மற்றும் இதர பாகங்களில் இருந்து தயாரிக்கப்படும், “அசாடிரச்டின்’ என்ற கூட்டுப் பொருள், இயற்கையான பூச்சிக் கொல்லிகளுக்கு உரிய குணங்களைக் கொண்டுள்ளது.
இதை, பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, மாற்றாக பயன்படுத்தலாம்.
கடந்த, 2011ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளின் சந்தை மதிப்பு, 130 கோடி டாலராக இருந்தது. இது, 2012 மற்றும் 2017ம் ஆண்டுக்கு இடையில், சராசரியாக, ஆண்டுக்கு, 15.8 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டு, 320 கோடி டாலாராக உயரும்.
இது, எதிர்காலத்தில், வேம்பின் அடிப்படையிலான பூச்சிகொல்லி மருந்து துறை, மேலும் வளர்ச்சி காண துணை புரியும்.
ஐரோப்பாவில், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு கடுமையான விதிமுறைகள் உள்ளதால், அங்கு, இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து சந்தை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
சென்ற, 2012ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து, வேம்பு விதைகள் உட்பட, வேம்பு அடிப்படையிலான பொருட்களின் ஏற்றுமதி, 57.30 லட்சம் டாலராக இருந்தது.
இது, மொத்த வேம்பு பொருட்களின் ஏற்றுமதியில், 2.79 சதவீதமாகும்.
அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள், இந்தியாவில் இருந்து அதிக அளவில் வேம்பு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்து கொள்கின்றன. கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், அமெரிக்கா, 26.20 லட்சம் டாலர் மதிப்பிலான வேம்பு பொருட்களை இறக்குமதி செய்து, இப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜப்பான், 2.80 லட்சம் டாலர் மதிப்பிலான, வேப்ப எண்ணெய் மற்றும் புண்ணாக்கையும், ஸ்பெயின் அதிக அளவில் வேம்பின் விதைகளையும் இறக்குமதி செய்துள்ளன.
இந்தியாவில், 2 கோடி வேப்ப மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, ஆண்டுக்கு, 35 லட்சம் டன் என்ற அளவில் கிடைக்கும், வேப்பங்கொட்டைகள் மூலம், 7 லட்சம் டன் வேப்ப எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
வேப்ப எண்ணெய் உற்பத்தி வளம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இருந்தபோதிலும், அதில், 30 சதவீதம், அதாவது, 2.5 லட்சம் டன் என்ற அளவிற்கு தான் வேப்ப எண்ணெய் உற்பத்தி உள்ளது.
இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது வேப்ப மரம். இதை, எஸ்.டி.ஐ. டீ.என்.ஆர்.சி., என்ற சர்வதேச அமைப்பு, கடந்த 1992ம் ஆண்டு, ஆசியாவின் பல பகுதிகள், ஆப்ரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் பயிரிட்டது.ஆனாலும், இன்றளவில், உலகின் மொத்த வேப்ப மரங்களில், 60 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன