வாழைக்கான விலை முன்னறிவிப்பு கோவை வேளாண் பல்கலை. தகவல்
தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழை 8.74 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 300.06 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, திருச்சி, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து ஜனவரி, 2020 முதல் வரத் தொடங்கியுள்ளது. சமீப காலங்களில் வாழைக்கான புதிய சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால் விலை குறைவதற்கான வாய்ப்புள்ளது.
இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவின் அடிப்படையில் பிப்ரவரி, 2020 முதல் மார்ச் 2020 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 24, கற்பூரவள்ளி ரூ. 32 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.35 வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், தொலைபேசி எண் : 0422-2431405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்ப விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லு}ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பழப்பயிர்கள் துறை, பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி எண் : 0422-6611269 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்
தினசரிநிலவரம்தெரியபடுத்தவும்